பயணம் @ டைம்மெஷின் - 10




காதலும் குழப்பமும்



தொடர்புடைய இடுகைகள்







‘டும் டும் டும் டும் . ஊரார் அனைவரும் கவனிக்க . நாட்டில் மன்னன் இல்லாதபடியால் , அடுத்த மன்னனைத்தெரிவு செய்யும்பொருட்டு , அரண்மனையார் அனைவரும் பட்டத்துயானையை ஊர்வலம் வரச்செய்துள்ளார்கள் . பட்டத்துயானை இங்கு நாளை வருவதால் , அதையே எல்லரும் கவனிக்கும்படி  வேண்டப்படுகிறார்கள் . யானை யாரின் கழுத்தில் மாலையிடுகிறதோ அவரே நாட்டின் மன்னராக அரியணை அமர்த்தப்படுவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் ’ என்று தூரத்தில் பறை அடித்துக்கொண்டு அரண்மனை செய்தியை தண்டோரா போட்டு தெரிவித்துக்கொண்டிருந்தான் ஒருவன் .

‘டேய் பாலா ! அந்த பொண்ண பாத்தியா ?’

‘யாருடா ?’

‘அதான்டா , நா தண்ணி வாங்க போனனே . அந்த வீட்டுல இருந்த பொண்ணுதான் மச்சி ’

‘இல்ல மச்சி . ஏன்டா கேட்கற ?’

‘இல்லடா ! சும்மாதான்

சந்துருவுக்கும் அந்த காதல் பித்தம் வந்தது ஆச்சரியப்படுவதற்கில்லை . அவளின் வசீகரக்குரலும் , செந்தளிர்க்கையும் , அக்கையைத்தொடும்போது வந்த இன்னதென்று அறுதியிடமுடியாத உணர்வும் சந்துருவை ஏதேதோ செய்தது . இந்த இளைஞன் உடல்நிலை அறிந்ததும் , நேராக அவள் வீட்டிற்கு மறுபடியும் சென்று அவளை பார்த்தேயாக வேண்டும் என்று முடிவு செய்தான் . அவள் மனதின் ஒருபுறமிருக்க , தான் காப்பாற்றிய அவ்விளைஞனைப் பற்றி எண்ணலானான் . 18 வயதுதானிருக்கவேண்டும் . மாநிறமாய் இருப்பினும் கம்பீரம் குறையாத கலையான முகம் அவனுடையது . இந்த வயதில் என்ன நோய் அவனை மயக்கமுறச்செய்துவிடமுடியும் என்று குழம்பினான் . மறுபுறம் பாலாவிற்கோ சந்துருவின் நடவடிக்கைக்கள் சிறிது ஆச்சரியமளித்தன . சாதாரணமாக தனக்குப்பிரச்சனை என்றாலும் தான் செய்யநினைத்ததை செய்யாமல் விடமாட்டான் சந்துரு என்பதை பாலா நன்கறிவான் . இருப்பினும் தனக்குத்தேவையில்லாத விஷயங்களைப்பற்றி அதிகமாய் கவலைப்படுபவனும் கிடையாது . ஆனால் , திருவாரூரிலும் சரி , இங்கும் சரி , சந்துரு சிறிது உணர்ச்சிமிக்கவனாய் காணப்படுவதுதான் பாலாவிற்கு ஆச்சரியமளித்தது . இங்கிருந்து சென்றபின் அதைப்பற்றிக்கேட்டேயாகவேண்டும் என்று பாலா முடிவெடுத்தான் . இவர்களின் நினைவுகளை சிதறடிக்கும் வண்ணம் ஒரு குரல் வர , குரல் வந்த திசையை நோக்கினால் தங்களுடன் வந்த அந்த இளம்துறவி அவர்களிடம் அவ்விளைஞனின் நோயைக்கண்டுபிடித்துவிட்டதாக கூறினான் .

‘என்ன நோய்ங்க ?’

‘அவர் ஒருவாரமாக ஆகாரம் எதுவும் உண்ணவில்லை . ஆதலாலே பசிமயக்கம் வந்துள்ளது . அவருக்கும் உங்களுக்கும் சேர்த்து தின்னுவதற்கான ஆகாரம் தயாராகிக்கொண்டிருக்கிறது . தயைசெய்து காத்திருக்கவும் .’ என்றான் அவன் .

‘சரிங்க ’ என்றவாறு ஓரிடத்தில் இருந்த முக்காலியில் இருவரும் அமர்ந்தனர் . சிறிதுநேரத்திற்குப்பின் உணவு தயாராகிவிட , மயங்கிக்கிடந்த இளைஞனுக்கு அரிசிக்கஞ்சியும் , இவர்களுக்கு அரிசி சாதமும் பனங்கிழங்கும் உணவாய் தரப்பட்டது . சாப்பிட்டு முடித்தபின் அங்கிருந்து விடைபெறுவதாக கூறினான் சந்துரு . ஆனால் , அவ்விளைஞனை விட்டு செல்லுவதற்கு அவனுக்கு மிக்கஷ்டமாய் இருந்தது . காரணம் அவனின் பேச்சுகள் . பிச்சையெடுத்து உண்ணும் உணவு தனக்குவேண்டாம் என்று அவன் அந்த துறவிகளிடம் கெஞ்சுவதைக்கேட்டு அதிசயப்பட்டார்கள் . சரி அவனையும் தன்னுடன் அழைத்துச்செல்ல முடிவெடுத்து அவனிடம் வந்து நின்றார்கள் .

‘தம்பி ! எங்களுக்கு துணையா எங்ககூட வருவிங்களா ?’

‘யார் நீங்கள் ? எதற்கு நானுங்களுடன் வரவேண்டும் ?’

‘நீ எங்களின் தம்பி ’ என்றான் சந்துரு . அதன்பின் கணநேரம் யோசித்த அவ்விளைஞன் உடன் வருவதாய் கூறினான் . பின் மூவரும் சேர்ந்து அங்கிருந்து விசாரித்து , தங்குவதற்கு ஏற்றமண்டபம் ஒன்றை கண்டுபிடித்தனர் .பின் மூவருக்கும் சேர்த்து வேட்டிசட்டைகள் ஒரு அங்காடியில் வாங்கினர் . அங்கு தாங்கள் கொடுத்த நாணயத்தை திருப்பிதிருப்பிப்பார்த்தான் கடைக்காரன் . பின், இரவு உணவை உண்ணும்பொருட்டு அங்கிருந்து ஒரு வீட்டிற்குச்சென்றனர் . அது என்னவோ தெரியவில்லை , அக்காலகட்டத்தில் ஹோட்டல்கள் என்றாலே என் கற்பனைக்கு வருவது ஒரு குடிசை . குடிசையினுள் ஒரு பாட்டி . அன்பும் இரக்கமும் ஒருசேர கருணை பொங்கும் முகம் . அதன் கையால் சமைக்கப்பட்ட அற்புத உணவு . வாழைஇலையில் விருந்து . சாப்பிட்டபின் முடிந்தவரை அவருக்கு சில காசுகள் . இவை மாத்திரமே அக்கால ஹோட்டல்களாக என் மனதில் பதிவாயிருக்கிறது . ஆனால் , இது சாதாரண கிராமத்திற்கு பொருந்தும் . பிற்காலங்களில் ஒரு மாபெரும் மண்டலமாய் உருவெடு்கக இருக்கும் தஞ்சைக்கு மேற்கூரியவை  பொருத்தமில்லாதது . இம்முறை தஞ்சையில் மூவரும் உணவருந்த சென்ற இடம் ஒரு பெரிய சாப்பாட்டுக்கடை . பரிமாறுவதற்கு இரு ஆண்களும் , உள்ளே சமையல் செய்ய இருபெண்களும் , கடையை நிர்வாகம் செய்ய  ஒருவர் என இக்காலகட்டத்தில் செயல்படும் ஹோட்டல்களுக்கு அக்காலத்திலே அடித்தளமிடும் வண்ணம் இருந்தது அந்த கடை  . நிச்சயதார்த்தம் ஆன சந்துரு அசைவம் சாப்பிடக்கூடாது என்ற விதியின் காரணமாய் , கிட்டத்தட்ட ஒன்றரைமாதகாலம் அசைவம் சாப்பிடாமல் இருந்தான் . இப்போது தன்னுடைய கல்யாணத்தை மறந்ததன் காரணமாய் அசைவம் சாப்பிடவேண்டுமென மதி ஆனையிட்டது . சாப்பிட்டு முடித்தபின் , திருவாரூரில் தன் முருகன் டாலர் செயினைக்கொண்டு வாங்கிய நாணயங்களை அக்கடைக்காரரிடம் கொடுத்தான் . மேலும் கீழுமாய் பார்த்த அக்கடைக்காரன் , அந்நாணயம் எங்கிருந்து கிடைத்தது என்பதற்கு ஏற்றதொரு பொய்யைக்கூறி தப்பித்தான் . தங்கமாய் இருந்த காரணத்தினால் , அந்நாணயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது .



மனித நாகரிகத்தின் தொடக்கக்காலத்தில் உலகத்தின் அனைத்துப்பகுதிகளிலும்  ஒரு பொருளை வாங்குவதற்கும் , விற்பதற்கும் பண்டமாற்றுமுறைதான் இருந்துவந்தது . இம்முறையில் , ஒருவர் தன்னிடமிருக்கும் நெல்லை கொடுத்துவிட்டு பால் , தயிர்  போன்றவற்றை பிறரிடமிருந்து வாங்கினர் . இம்முறையில் , மிகுதியான பொருட்களையோ , விலை அடர்ந்த பொருட்களையோ பண்டமாற்றம் செய்யும்போது இடர்பாடு ஏற்பட்டது . ஆதலால் ஒரு பொருளை மையமாக வைத்துக்கொள்ளலாம்  என திட்டமிட்டனர் . தொடக்கத்தில் மாட்டினை மையப்பொருளாக கொண்டு பண்டமாற்றம் செய்தனர் . மாடு , மிகுந்த அளவில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்பட்டது . குறைந்த அளவில் வாங்குவதில் மீண்டும் இடர்பாடு ஏற்பட்டது . ஆதலால் , சோழிகளை மையப்பொருளாக பின்னாளில் பயன்படுத்தினர் . சோழிகளைக்கொண்டு குறைந்த அளவில் பொருட்கள் வாங்குவது எளிதாக இருந்தது . ஆனால் , விலைமிகு பொருட்களை வாங்கவேண்டுமெனில் மூட்டைமூட்டையாக சோழிகளை தருதல் வேண்டும் . அதுமட்டுமின்றி சோழிகள் எளிதில் உடைந்துவிடும் . இச்சமயத்தில் தான் உலோகங்கள் பயன்பாட்டிற்கு வந்தது .  அதன்பின் உலோகத்தகடுகளை மையப்பொருளாக கொண்டு வணிகத்தை கையாளத்தொடங்கினர் . பின் அவ்வுலோகத்திலிருந்து செம்பு மற்றும் தங்கத்தை பயன்படுத்த துவங்கினர் . இரண்டுமே கடின பொருட்கள் ஆதலால்  , வியாபாரத்திற்கு நன்கு பயன்பட்டன . செப்புத்தகட்டைக்கொண்டு சாதாரண பொருட்கள் வாங்குவதற்கும் , தங்க உருண்டைகளை மதிப்பு மிகுந்த அரிய பொருட்கள் வாங்கவும் பயன்படுத்தினர் . தங்க உருண்டைகள் வேப்பம்பழம் வடிவத்திலும் நெல்லிக்கனி வடிவத்திலும் இருந்தன . இவையனைத்தும் , மக்கள் ஒன்றாய் முடியாட்சியின் கீழ் வராதபோது நடைபெற்ற முறைகள் . பிறகு தனித்தனி குழுக்களாக பிரிந்து , தங்களுக்கென தனி அரசன் மற்றும் குலச்சின்னத்தை ஏற்படுத்திய காலகட்டங்களில் தங்களின் சின்னத்தை முத்திரையாக மாற்றி நாணயங்களில் வெளியிட்டனர் . மன்னர் ஏழாரன் காலத்தில் இருந்த தங்கக்காசுகளின் சின்னம் மற்றும் முத்திரை இப்போது பழமையாகிவிட்டது என்பதால் தான் அக்கடைக்காரன் சந்துருவிடம் சில கேள்விகளை கேட்டிருந்தான் .  

எப்படியோ அவனிடம் சமாளித்து வந்து மண்டபத்தில் உறக்கம்கொள்ள ஆரம்பித்தனர் . அன்றைய இரவு யாரும் யாருடனும் பேசவில்லை . சந்துரு மாத்திரம் உறக்கமின்றி அவளை நினைத்தவாறே விழித்திருந்தான் . அவளின் நினைவுகள் அவனுக்கு தூக்கத்தைக்காட்டிலும் சுகமானதொரு உணர்வினை விதைத்தது . அவளை எப்படியாவது நாளைப்பார்த்து பேசிவிடவேண்டும் என்று முடிவெடுத்தான் . அந்த கதவிடுக்கின்வழியே , அவள் கண்சிமிட்டிய அந்த நொடி ,  மின்னலை வெட்டியெடுத்து மனதில் இறக்கியதுபோலிருந்தது அவனுக்கு . அவளின் ஞாபகம் அவனை வாட்டியெடுக்க ஆரம்பித்தது . தூக்கமில்லாமல் புரண்டுகொண்டிருந்தான் சந்துரு . அதே நேரத்தில் இன்னொருவனும் தூக்கமில்லாமல் விழித்து பரணைப்பார்த்துக்கொண்டிருந்தான் . அவன் கண்களில் ஒரு வேட்கை தெரிந்தது . பரணில் ஒரு பூச்சியைப்பிடிக்க காத்திருக்கும் பல்லியைப்பார்த்துக்கொண்டிருந்தான் .சரியாக பல்லி பூச்சியைப்பிடிக்கும் நேரத்திற்கும் , அவன் சபாஷ் என சத்தமிடுவதற்கும் நேரம் சரியாய் இருந்தது .

‘என்ன ஆச்சு ?’ - சந்துரு

‘ஒன்றுமில்லை . ஒரு சின்ன விளையாட்டு .’

‘ஓ ! சரி தம்பி . படுத்து தூங்கு .’

‘ம் .’ என்ற அவ்விளைஞன் சிறிது நேரம் கழித்து

உங்களின் வசனஉச்சரிப்பு ஏன் எங்களைப்போல் இல்லை ?’ – என்றான் .


‘நாங்க வேற இடத்துல இருந்து வரோம் . உங்கிட்ட சொன்னாலும் புரியாது . ஆமா , உம்பேரன்ன ?’

‘திருமாவளவன் . தங்களின் பெயர் ?’

‘என் பேரு சந்துரு . இவன் பாலா . என்னோட நண்பன் . ஒருவாராம ஏன் சாப்டல ?’

‘அது ஒரு பெரிய கதை . வழியில் செல்லும் அனைவரும் கண்டும்காணமல் போகும்போது தாங்கள் மட்டும் ஏன் எனக்கு உதவினீர்கள் ?’

‘உன்னப்பாக்கரப்போ என்னோட தம்பிய பாக்கர மாதிரயே இருந்துச்சி ’

‘தங்களின் தம்பி என்ன செய்கிறார் ?’

‘செத்துட்டான் .’

‘எப்படி ?’

‘அது ஒரு பைக் ஆக்சிடன்ட் . ’ என்று தன்னுடைய நினைவலைகளுக்குள் சென்றான் . சந்துருவின் தம்பி மிஸரா . தன்னுடைய 19 –வது பிறந்தநாளன்று , சந்துருவின் புதுபைக்கில்  நண்பர்களுடன்  வெளியே சென்றான் . நண்பர்கள் அனைவரும் பைக்கில் செல்லும் வேகத்தைக்காணும்போது தானும் அவர்களுடன் போட்டிபோட்டு செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தான் . அவனுடைய இழப்பை மறக்க கிட்டத்தட்ட மூன்றுவருடம் தேவைப்பட்டது . அவன் தம்பியினால் தான் , திருவாரூரில் இன்னொரு தம்பி இறக்கக்கூடாது என முயற்சி செய்தான் . அதே இரக்ககுணம் தான் இவ்விளைஞனைக்காப்பாற்றவும் உதவியது . அவனது நினைவுகளை கலைக்கும் வண்ணம் வளவனின் குரல் கேட்டது .


‘அப்படியென்றால் ?’

‘அது ஒரு விபத்து .’

‘நான் இதுவரை யாரிடமும் நன்றி சொன்னது கிடையாது . ஆனால் உங்களிடம் மட்டும் கேட்க வேண்டுமென தோன்றுகிறது .’

‘பரவால்ல . விடுப்பா . தூங்கலயா ?’

‘இல்லை . தூக்கம் வரவில்லை .’

‘சரி . எதுக்கு உன்ன காப்பாத்துனா அரசதண்டனைன்னு சொன்னாங்க ?’

‘அது’ என்று வளவன் வாயெடுக்கம்நேரம் , தங்கியிருந்த மண்டபத்தினுள் பல்வேறு காலடிச்சத்தங்கள் கேட்டது . திடிரென கையில் வேல் மற்றும் வாளுடன் பல காவல் வீரர்கள் அங்கே வந்து இவர்களைச்சுற்றி நின்றனர் . பாலா திடுதிப்பென விழித்து , திருதிருவென முழித்தான் . சந்துருவும் ஒன்றும் புரியாமல் அவர்களையே பார்த்தான் . அவர்கள் மூவரின் கழுத்தைச்சுற்றியும் பத்துக்கும்மேற்பட்ட வேல்கள் இருந்தன . சிறிது அசைந்தாலும் அவை தொண்டையைக்கிழித்துக்கொண்டு சென்றுவிடும் என புரிந்துகொண்டார்கள் .  அக்காவல் கூட்டத்தை கிழித்துக்கொண்டு ஒருவன் உள்ளே வந்தான் . அவன் வந்த தோரணையைக்கானும்போது, அவன் கண்டிப்பாய் தலைமைக்காவலனாய்த்தானிருப்பான் .

‘அரண்மனையிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவனை அண்டவிட்டதால் உங்கள் இருவரையும் கழுவேற்றக்கூறி ஆணை . உடனே கிளம்புங்கள் அரண்மனை சிறைக்கு .’ என்றான் .

பயணம் @ டைம்மெஷின்
அத்தியாயம் – 4
பகுதி -2
காதலும் குழப்பமும்
 ©
Megneash K Thirumurugan @ Myfreecopyrights.com



Comments

  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை