பயணம் @ டைம்மெஷின் - 10
காதலும் குழப்பமும்
தொடர்புடைய இடுகைகள்
| ||||||
‘டும் டும் டும்
டும் . ஊரார் அனைவரும் கவனிக்க . நாட்டில் மன்னன் இல்லாதபடியால் , அடுத்த மன்னனைத்தெரிவு
செய்யும்பொருட்டு , அரண்மனையார் அனைவரும் பட்டத்துயானையை ஊர்வலம் வரச்செய்துள்ளார்கள்
. பட்டத்துயானை இங்கு நாளை வருவதால் , அதையே எல்லரும் கவனிக்கும்படி வேண்டப்படுகிறார்கள் . யானை யாரின் கழுத்தில் மாலையிடுகிறதோ
அவரே நாட்டின் மன்னராக அரியணை அமர்த்தப்படுவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் ’ என்று
தூரத்தில் பறை அடித்துக்கொண்டு அரண்மனை செய்தியை தண்டோரா போட்டு தெரிவித்துக்கொண்டிருந்தான் ஒருவன்
.
‘டேய் பாலா ! அந்த
பொண்ண பாத்தியா ?’
‘யாருடா ?’
‘அதான்டா , நா
தண்ணி வாங்க போனனே . அந்த வீட்டுல இருந்த பொண்ணுதான் மச்சி ’
‘இல்ல மச்சி .
ஏன்டா கேட்கற ?’
‘இல்லடா ! சும்மாதான்
’
சந்துருவுக்கும்
அந்த காதல் பித்தம் வந்தது ஆச்சரியப்படுவதற்கில்லை . அவளின் வசீகரக்குரலும் , செந்தளிர்க்கையும்
, அக்கையைத்தொடும்போது வந்த இன்னதென்று அறுதியிடமுடியாத உணர்வும் சந்துருவை ஏதேதோ செய்தது
. இந்த இளைஞன் உடல்நிலை அறிந்ததும் , நேராக அவள் வீட்டிற்கு மறுபடியும் சென்று அவளை
பார்த்தேயாக வேண்டும் என்று முடிவு செய்தான் . அவள் மனதின் ஒருபுறமிருக்க , தான் காப்பாற்றிய அவ்விளைஞனைப்
பற்றி எண்ணலானான் . 18 வயதுதானிருக்கவேண்டும் . மாநிறமாய் இருப்பினும் கம்பீரம் குறையாத
கலையான முகம் அவனுடையது . இந்த வயதில் என்ன நோய் அவனை மயக்கமுறச்செய்துவிடமுடியும்
என்று குழம்பினான் . மறுபுறம் பாலாவிற்கோ சந்துருவின் நடவடிக்கைக்கள் சிறிது ஆச்சரியமளித்தன
. சாதாரணமாக தனக்குப்பிரச்சனை என்றாலும் தான் செய்யநினைத்ததை செய்யாமல் விடமாட்டான்
சந்துரு என்பதை பாலா நன்கறிவான் . இருப்பினும் தனக்குத்தேவையில்லாத விஷயங்களைப்பற்றி
அதிகமாய் கவலைப்படுபவனும் கிடையாது . ஆனால் , திருவாரூரிலும் சரி , இங்கும் சரி , சந்துரு
சிறிது உணர்ச்சிமிக்கவனாய் காணப்படுவதுதான் பாலாவிற்கு ஆச்சரியமளித்தது . இங்கிருந்து
சென்றபின் அதைப்பற்றிக்கேட்டேயாகவேண்டும் என்று பாலா முடிவெடுத்தான் . இவர்களின் நினைவுகளை
சிதறடிக்கும் வண்ணம் ஒரு குரல் வர , குரல் வந்த திசையை நோக்கினால் தங்களுடன் வந்த அந்த
இளம்துறவி அவர்களிடம் அவ்விளைஞனின் நோயைக்கண்டுபிடித்துவிட்டதாக கூறினான் .
‘என்ன நோய்ங்க
?’
‘அவர் ஒருவாரமாக
ஆகாரம் எதுவும் உண்ணவில்லை . ஆதலாலே பசிமயக்கம் வந்துள்ளது . அவருக்கும் உங்களுக்கும்
சேர்த்து தின்னுவதற்கான ஆகாரம் தயாராகிக்கொண்டிருக்கிறது . தயைசெய்து காத்திருக்கவும்
.’ என்றான் அவன் .
‘சரிங்க ’ என்றவாறு
ஓரிடத்தில் இருந்த முக்காலியில் இருவரும் அமர்ந்தனர் . சிறிதுநேரத்திற்குப்பின் உணவு
தயாராகிவிட , மயங்கிக்கிடந்த இளைஞனுக்கு அரிசிக்கஞ்சியும் , இவர்களுக்கு அரிசி சாதமும்
பனங்கிழங்கும் உணவாய் தரப்பட்டது . சாப்பிட்டு முடித்தபின் அங்கிருந்து விடைபெறுவதாக
கூறினான் சந்துரு . ஆனால் , அவ்விளைஞனை விட்டு செல்லுவதற்கு அவனுக்கு மிக்கஷ்டமாய்
இருந்தது . காரணம் அவனின் பேச்சுகள் . பிச்சையெடுத்து உண்ணும் உணவு தனக்குவேண்டாம்
என்று அவன் அந்த துறவிகளிடம் கெஞ்சுவதைக்கேட்டு அதிசயப்பட்டார்கள் . சரி அவனையும் தன்னுடன்
அழைத்துச்செல்ல முடிவெடுத்து அவனிடம் வந்து நின்றார்கள் .
‘தம்பி ! எங்களுக்கு
துணையா எங்ககூட வருவிங்களா ?’
‘யார் நீங்கள்
? எதற்கு நானுங்களுடன் வரவேண்டும் ?’
‘நீ எங்களின் தம்பி
’ என்றான் சந்துரு . அதன்பின் கணநேரம் யோசித்த அவ்விளைஞன் உடன் வருவதாய் கூறினான்
. பின் மூவரும் சேர்ந்து அங்கிருந்து விசாரித்து , தங்குவதற்கு ஏற்றமண்டபம் ஒன்றை கண்டுபிடித்தனர்
.பின் மூவருக்கும் சேர்த்து வேட்டிசட்டைகள் ஒரு அங்காடியில் வாங்கினர் . அங்கு தாங்கள்
கொடுத்த நாணயத்தை திருப்பிதிருப்பிப்பார்த்தான் கடைக்காரன் . பின், இரவு உணவை உண்ணும்பொருட்டு
அங்கிருந்து ஒரு வீட்டிற்குச்சென்றனர் . அது என்னவோ தெரியவில்லை , அக்காலகட்டத்தில்
ஹோட்டல்கள் என்றாலே என் கற்பனைக்கு வருவது ஒரு குடிசை . குடிசையினுள் ஒரு பாட்டி .
அன்பும் இரக்கமும் ஒருசேர கருணை பொங்கும் முகம் . அதன் கையால் சமைக்கப்பட்ட அற்புத
உணவு . வாழைஇலையில் விருந்து . சாப்பிட்டபின் முடிந்தவரை அவருக்கு சில காசுகள் . இவை
மாத்திரமே அக்கால ஹோட்டல்களாக என் மனதில் பதிவாயிருக்கிறது . ஆனால் , இது சாதாரண கிராமத்திற்கு
பொருந்தும் . பிற்காலங்களில் ஒரு மாபெரும் மண்டலமாய் உருவெடு்கக இருக்கும் தஞ்சைக்கு
மேற்கூரியவை பொருத்தமில்லாதது . இம்முறை தஞ்சையில்
மூவரும் உணவருந்த சென்ற இடம் ஒரு பெரிய சாப்பாட்டுக்கடை . பரிமாறுவதற்கு இரு ஆண்களும் , உள்ளே சமையல்
செய்ய இருபெண்களும் , கடையை நிர்வாகம் செய்ய ஒருவர் என இக்காலகட்டத்தில் செயல்படும் ஹோட்டல்களுக்கு
அக்காலத்திலே அடித்தளமிடும் வண்ணம் இருந்தது அந்த கடை . நிச்சயதார்த்தம் ஆன சந்துரு அசைவம் சாப்பிடக்கூடாது
என்ற விதியின் காரணமாய் , கிட்டத்தட்ட ஒன்றரைமாதகாலம் அசைவம் சாப்பிடாமல் இருந்தான்
. இப்போது தன்னுடைய கல்யாணத்தை மறந்ததன் காரணமாய் அசைவம் சாப்பிடவேண்டுமென மதி ஆனையிட்டது
. சாப்பிட்டு முடித்தபின் , திருவாரூரில் தன் முருகன் டாலர் செயினைக்கொண்டு
வாங்கிய நாணயங்களை அக்கடைக்காரரிடம்
கொடுத்தான் . மேலும் கீழுமாய் பார்த்த அக்கடைக்காரன் , அந்நாணயம் எங்கிருந்து கிடைத்தது
என்பதற்கு ஏற்றதொரு பொய்யைக்கூறி தப்பித்தான் . தங்கமாய் இருந்த காரணத்தினால் , அந்நாணயம்
ஏற்றுக்கொள்ளப்பட்டது .
மனித நாகரிகத்தின்
தொடக்கக்காலத்தில் உலகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும் , விற்பதற்கும் பண்டமாற்றுமுறைதான்
இருந்துவந்தது . இம்முறையில் , ஒருவர் தன்னிடமிருக்கும் நெல்லை கொடுத்துவிட்டு பால்
, தயிர் போன்றவற்றை பிறரிடமிருந்து வாங்கினர்
. இம்முறையில் , மிகுதியான பொருட்களையோ , விலை அடர்ந்த பொருட்களையோ பண்டமாற்றம் செய்யும்போது
இடர்பாடு ஏற்பட்டது . ஆதலால் ஒரு பொருளை மையமாக வைத்துக்கொள்ளலாம் என திட்டமிட்டனர் . தொடக்கத்தில் மாட்டினை மையப்பொருளாக
கொண்டு பண்டமாற்றம் செய்தனர் . மாடு , மிகுந்த அளவில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்பட்டது
. குறைந்த அளவில் வாங்குவதில் மீண்டும் இடர்பாடு ஏற்பட்டது . ஆதலால் , சோழிகளை மையப்பொருளாக
பின்னாளில் பயன்படுத்தினர் . சோழிகளைக்கொண்டு குறைந்த அளவில் பொருட்கள் வாங்குவது எளிதாக
இருந்தது . ஆனால் , விலைமிகு பொருட்களை வாங்கவேண்டுமெனில் மூட்டைமூட்டையாக சோழிகளை
தருதல் வேண்டும் . அதுமட்டுமின்றி சோழிகள் எளிதில் உடைந்துவிடும் . இச்சமயத்தில் தான்
உலோகங்கள் பயன்பாட்டிற்கு வந்தது . அதன்பின்
உலோகத்தகடுகளை மையப்பொருளாக கொண்டு வணிகத்தை கையாளத்தொடங்கினர் . பின் அவ்வுலோகத்திலிருந்து
செம்பு மற்றும் தங்கத்தை பயன்படுத்த துவங்கினர் . இரண்டுமே கடின பொருட்கள் ஆதலால் , வியாபாரத்திற்கு நன்கு பயன்பட்டன . செப்புத்தகட்டைக்கொண்டு
சாதாரண பொருட்கள் வாங்குவதற்கும் , தங்க உருண்டைகளை மதிப்பு மிகுந்த அரிய பொருட்கள்
வாங்கவும் பயன்படுத்தினர் . தங்க உருண்டைகள் வேப்பம்பழம் வடிவத்திலும் நெல்லிக்கனி
வடிவத்திலும் இருந்தன . இவையனைத்தும் , மக்கள் ஒன்றாய் முடியாட்சியின் கீழ் வராதபோது
நடைபெற்ற முறைகள் . பிறகு தனித்தனி குழுக்களாக பிரிந்து , தங்களுக்கென தனி அரசன் மற்றும்
குலச்சின்னத்தை ஏற்படுத்திய காலகட்டங்களில் தங்களின் சின்னத்தை முத்திரையாக மாற்றி
நாணயங்களில் வெளியிட்டனர் . மன்னர் ஏழாரன் காலத்தில் இருந்த தங்கக்காசுகளின் சின்னம்
மற்றும் முத்திரை இப்போது பழமையாகிவிட்டது என்பதால் தான் அக்கடைக்காரன் சந்துருவிடம்
சில கேள்விகளை கேட்டிருந்தான் .
எப்படியோ அவனிடம்
சமாளித்து வந்து மண்டபத்தில் உறக்கம்கொள்ள ஆரம்பித்தனர் . அன்றைய இரவு யாரும் யாருடனும்
பேசவில்லை . சந்துரு மாத்திரம் உறக்கமின்றி அவளை நினைத்தவாறே விழித்திருந்தான் . அவளின்
நினைவுகள் அவனுக்கு தூக்கத்தைக்காட்டிலும் சுகமானதொரு உணர்வினை விதைத்தது . அவளை எப்படியாவது
நாளைப்பார்த்து பேசிவிடவேண்டும் என்று முடிவெடுத்தான் . அந்த கதவிடுக்கின்வழியே , அவள்
கண்சிமிட்டிய அந்த நொடி , மின்னலை வெட்டியெடுத்து
மனதில் இறக்கியதுபோலிருந்தது அவனுக்கு . அவளின் ஞாபகம் அவனை வாட்டியெடுக்க ஆரம்பித்தது
. தூக்கமில்லாமல் புரண்டுகொண்டிருந்தான் சந்துரு . அதே நேரத்தில் இன்னொருவனும் தூக்கமில்லாமல்
விழித்து பரணைப்பார்த்துக்கொண்டிருந்தான் . அவன் கண்களில் ஒரு வேட்கை தெரிந்தது . பரணில்
ஒரு பூச்சியைப்பிடிக்க காத்திருக்கும் பல்லியைப்பார்த்துக்கொண்டிருந்தான் .சரியாக பல்லி
பூச்சியைப்பிடிக்கும் நேரத்திற்கும் , அவன் சபாஷ் என சத்தமிடுவதற்கும் நேரம் சரியாய்
இருந்தது .
‘என்ன ஆச்சு
?’ - சந்துரு
‘ஒன்றுமில்லை .
ஒரு சின்ன விளையாட்டு .’
‘ஓ ! சரி தம்பி
. படுத்து தூங்கு .’
‘ம் .’ என்ற அவ்விளைஞன்
சிறிது நேரம் கழித்து
‘உங்களின் வசனஉச்சரிப்பு
ஏன் எங்களைப்போல் இல்லை ?’ – என்றான் .
‘நாங்க வேற இடத்துல
இருந்து வரோம் . உங்கிட்ட சொன்னாலும் புரியாது . ஆமா , உம்பேரன்ன ?’
‘திருமாவளவன்
. தங்களின் பெயர் ?’
‘என் பேரு சந்துரு
. இவன் பாலா . என்னோட நண்பன் . ஒருவாராம ஏன் சாப்டல ?’
‘அது ஒரு பெரிய
கதை . வழியில் செல்லும் அனைவரும் கண்டும்காணமல் போகும்போது தாங்கள் மட்டும் ஏன் எனக்கு
உதவினீர்கள் ?’
‘உன்னப்பாக்கரப்போ
என்னோட தம்பிய பாக்கர மாதிரயே இருந்துச்சி ’
‘தங்களின் தம்பி
என்ன செய்கிறார் ?’
‘செத்துட்டான்
.’
‘எப்படி ?’
‘அது ஒரு பைக்
ஆக்சிடன்ட் . ’ என்று தன்னுடைய நினைவலைகளுக்குள் சென்றான் . சந்துருவின் தம்பி மிஸரா
. தன்னுடைய 19 –வது பிறந்தநாளன்று , சந்துருவின் புதுபைக்கில் நண்பர்களுடன் வெளியே சென்றான் . நண்பர்கள் அனைவரும் பைக்கில் செல்லும் வேகத்தைக்காணும்போது
தானும் அவர்களுடன் போட்டிபோட்டு செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தான்
. அவனுடைய இழப்பை மறக்க கிட்டத்தட்ட மூன்றுவருடம் தேவைப்பட்டது . அவன் தம்பியினால்
தான் , திருவாரூரில் இன்னொரு தம்பி இறக்கக்கூடாது என முயற்சி செய்தான் . அதே இரக்ககுணம்
தான் இவ்விளைஞனைக்காப்பாற்றவும் உதவியது . அவனது நினைவுகளை கலைக்கும் வண்ணம் வளவனின்
குரல் கேட்டது .
‘அப்படியென்றால்
?’
‘அது ஒரு விபத்து
.’
‘நான் இதுவரை யாரிடமும்
நன்றி சொன்னது கிடையாது . ஆனால் உங்களிடம் மட்டும் கேட்க வேண்டுமென தோன்றுகிறது .’
‘பரவால்ல . விடுப்பா
. தூங்கலயா ?’
‘இல்லை . தூக்கம்
வரவில்லை .’
‘சரி . எதுக்கு
உன்ன காப்பாத்துனா அரசதண்டனைன்னு சொன்னாங்க ?’
‘அது’ என்று வளவன்
வாயெடுக்கம்நேரம் , தங்கியிருந்த மண்டபத்தினுள் பல்வேறு காலடிச்சத்தங்கள் கேட்டது
. திடிரென கையில் வேல் மற்றும் வாளுடன் பல காவல் வீரர்கள் அங்கே வந்து இவர்களைச்சுற்றி
நின்றனர் . பாலா திடுதிப்பென விழித்து , திருதிருவென முழித்தான் . சந்துருவும் ஒன்றும்
புரியாமல் அவர்களையே பார்த்தான் . அவர்கள் மூவரின் கழுத்தைச்சுற்றியும் பத்துக்கும்மேற்பட்ட
வேல்கள் இருந்தன . சிறிது அசைந்தாலும் அவை தொண்டையைக்கிழித்துக்கொண்டு சென்றுவிடும்
என புரிந்துகொண்டார்கள் . அக்காவல் கூட்டத்தை
கிழித்துக்கொண்டு ஒருவன் உள்ளே வந்தான் . அவன் வந்த தோரணையைக்கானும்போது, அவன் கண்டிப்பாய்
தலைமைக்காவலனாய்த்தானிருப்பான் .
‘அரண்மனையிலிருந்து
ஒதுக்கிவைக்கப்பட்டவனை அண்டவிட்டதால் உங்கள் இருவரையும் கழுவேற்றக்கூறி ஆணை . உடனே
கிளம்புங்கள் அரண்மனை சிறைக்கு .’ என்றான் .
பயணம் @ டைம்மெஷின்
அத்தியாயம் – 4
பகுதி -2
காதலும் குழப்பமும்
©
Megneash K Thirumurugan @ Myfreecopyrights.com
சிறந்த பதிவு
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
நன்றி அண்ணா !
Delete