காதல் காதல் – தொடர்கதை – நிறைவுப்பகுதி






அவள் எதற்காக கோவப்படுகிறாள் என்பது புரியாமல் குழம்பிய மதன் , ஏதேதோ முயற்சி செய்தும் அவளிடமிருக்கும் காரணத்தைக் கண்டறியமுடியவில்லை . இப்படியே இரு நாட்கள் முடிந்தது . அவள் கல்லூரியே கதி என்றிருந்தான் இன்றைய தினம் அவளிடம் பேசி என்னவென்று அறிந்துகொள்ளவேண்டும் என்றவாறு முடிவெடுத்தவன் அவள் கல்லூரியை விட்டு வரும் வழியில் நின்றுகொண்டிருந்தான் . அவளும் வந்தாள் . அவள் கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினான் .

‘எங்கிட்ட ஏன் அம்மு பேசமாட்டேன்ற ?’ என்று குரல் தழுதழுத்தவாறே கேட்டான் . கண்கள் வழக்கம்போல கண்ணிருக்கு பழகியிருந்தது . காதலித்தால் அதிகம் சுரப்பது கண்ணிர் தான் . அவள் தலைகுனிந்தவாறே நின்றிருந்தாள் . அவளின் முகத்தைப்பிடித்து நிமிர்த்தினான் . அவளும் கண்ணிரை மறைக்கத்தான் தலைகுனிந்து நின்றிருந்தாள் . அவன் கண்களைப்பார்த்ததும் , அவளின் மனதினில் குடிகொண்டிருந்த சோகம் கண்களின் வழியே கண்ணீராக பீறிட்டது .

‘எங்கிட்ட எதுவும் கேட்காதடா. என்ன இப்பவே எங்கயாச்சும் கூட்டிட்டு போய்டு ’ என்று அழுதவாறே கூறினாள் .

‘நாம ஒன்னும் அனாத இல்லைடி . யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்க . அதான் உங்க வீட்டுல ஓ.கே சொல்லிட்டாங்கள .’ என்றான் . உண்மையில் மையலின் தந்தை , மதனை அனுப்பிவைத்தபின் மாலினியை அழைத்து பேசியிருந்தார் . அவளும் பயந்துகொண்டு மையலுக்கு மதனின்மேல் இருக்கும் காதல் பற்றியும் , இவர்களைப்பிரிக்க நினைத்தால் ஓடிச்சென்றாவது திருமணம் செய்துகொள்வார்கள் என்பதனையும் தெரிவித்திருக்கிறாள் . இனி இவர்களிருவரும் பேசுவதைக்கண்காணிக்கும் பணியை மாலினியிடம் ஒப்படைத்துவிட்டு , மையலுக்கு அன்று இரவே மாப்பிள்ளைத்தேடும் பணியைத்தொடங்கியிருந்தார் . மையலோ தந்தையிடம் புரியவைக்க முயற்சிக்க ,

‘உனக்குப்பின்னாடி இவ வாழ்க்கைய நீ நினைச்சிப்பாத்தியாமா ? . தயவு செஞ்சு என் குடும்ப மானத்த அழிச்சிடாதமா ’ என்று அழுதார் . அவளும் அழுதுகொண்டே அவளின் தந்தையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாள் . தன்னைப்பெற்றவருக்காக , தான் பெறாத தன் காதலனை கைவிட முயற்சித்தாள் . கையை மட்டும் பிடித்திருப்பவனாக இருந்தால் அவனை கைவிட்டிருக்கலாம் . ஆனால் அவளின் உயிரைப்பிடித்திருக்கும் மதனை எப்படி விட முடியும் ? இரண்டு நாட்களிலேயே அவளின் தந்தை பாசத்தை வென்றது அவளின் காதல் .

இப்போது மதனும் ஒருவாறு யோசித்தான் . இவளின் வீட்டில் ஏதோ பிரச்சனை என்பது மாத்திரம் புரிந்தது .

‘சரி  . கவலப்படாத அம்மு .நா பாத்துக்கறேன் ’ என்றவாறு அவளுடன் பேருந்து நிலையத்திற்கு கிளம்பினான் . இரண்டு நாட்களாய் துடிதுடித்துக்கொண்டிருந்தவன் இன்று ஆறுதலாய் இருந்தான் . மனதில் மாத்திரம் பயமும் , என்ன செய்யலாம் என்ற குழப்பமும் ஓடியது . பஸ் ஸ்டான்டில் காத்திருந்த கண்ணனிடம் கேட்டபின் ஒரு நல்ல யோசனை தோன்றியது . நாளை மறுநாள் நல்ல முகூர்த்த தினம் . அன்றைய காலைப்பொழுதில் ரிஜிஸ்டர் ஆபிஸ் அழைத்துச்சென்று அவளை மனம் புரிந்துகொள்ளலாம் . அதன்பின் அவள் வீட்டிலேயே அவள் இருக்கட்டும் . யார்வீட்டிலும் சொல்லவேண்டாம் . அடுத்தவாரம் வரவிருக்கும் கேம்பஸ் இன்டர்வியுவில் எப்படியாவது வேலையை வாங்கிவிட்டால் சாமாளித்துவிடலாம் என்று முடிவெடுத்தான் . அதை மையலிடமும் தெரிவித்தான் . மையல் ஓரளவு ஆறுதலடைந்தாள் . ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து இன்னொருத்தி பதறிக்கொண்டிருந்தாள் . இவர்களிருவருக்கும் மூன்று வருடமாய் இணைப்புப்பாலமாய் இருந்த மாலினி தான் . மையலின் தந்தை அன்றைய பொழுது இவளை மிரட்டியது இவளின் நினைவுக்கு வந்தது .

‘இங்க பாருமா . நீ செஞ்சத எல்லாம் உங்க வீட்டுல சொன்னா என்ன ஆகும்னு தெரியும் தான ?’ என்ற அவரின் குரல் அவளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது . ஒருவேளை அவளின் வீட்டில் இதெல்லாம் தெரிந்தால் அவளின் படிப்பு பாதியில் நின்றுவிடும் . அதன்பின் அடுத்த ஒரு மாதத்தில் அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடந்துவிடும் . அவளுக்கு அதில் துளிகூட உடன்பாடில்லை . அவள் வாழ்க்கையை நன்றாய் அனுபவிக்க நினைப்பவள் மாலினி .

அடுத்த இரு தினங்கள் மையல் அந்த பேருந்தில் வரவில்லை . அவளின் தோழிகளிடம் கேட்டபின் தான் தெரிந்தது , அவளின் தந்தையே கல்லூரிக்கு கொண்டுவந்துவிடுகிறார் என்று .எப்படியாவது அவளைப்பார்த்து பேசியாகவேண்டும் என்று அவளின் கல்லூரிக்குள் நுழைந்தான் . அவளின் வகுப்பறையின்வழியாக சைகை செய்து வெளியே வர சொன்னான் . அவளின் முகம் முற்றும் பொலிவிழந்து கிடந்தது . கணவனை இழந்த கைம்பெண் போல் காட்சியளித்தாள் .

‘என்ன ஆச்சு மையல் ?’

‘நமக்குள்ள செட் ஆகாது மதன் . நாம பிரிஞ்சிடலாம் .’

‘ஹேய் என்ன விளையாட்றியா ?’


‘ ப்ளீஸ் மதன் . ’ என்றாள் அழுதுகொண்டு . அவளின் அழும் முகத்தைப்பார்த்து அவனுக்கு கோவம் தான் வந்தது .

‘ஈஸியா வருதுனு உடனே அழ ஆரம்பிக்காத . எப்போப்பாரு அழுறது . இப்போ என்னடி உன் பிரச்சன . நா உன்ன விட்டு போகனுமா ?’

அவள் பதிலேதும் சொல்லவில்லை.  ஒருவாறு கோத்தைக்குறைத்தபடியே மென்மையாக அவளிடம் கூறினான் .

‘நா உங்கிட்ட ப்ராமிஸ் பண்ணத மறந்துட்டியா ? உன்ன விட்டு போற நாள் வந்துச்சுனா என் உயிர் என்ன விட்டு போய்டும் அம்மு .’

அவள் இன்னும் அதிகமாய் விசும்ப ஆரம்பித்தாள் .
‘எங்கப்பாவுக்கு இது பிடிக்கல ’

 ‘ உங்க அப்பன் பெரிய இவன் . அவனோட பாசம் உன்ன அப்படியே தடுக்குதா ?என்னோட அங்குளுக்குக்கூட தான் இது பிடிக்கல . அதுக்காக நா உன்ன விட்டுட்டேனா ?’

‘உனக்கு அப்பா இருந்தா தெரிஞ்சிருக்கும் ’ என்று யோசிக்காமல் கூறினாள் . அவனோ தலையில் இடி இறங்கியதைப்போல் சிலையாய் நின்றான் . தன்னை ஏறத்தாழ அநாதை என்று கூறிவிட்டாளே என்பதை அவனால் ஜீரனிக்கமுடியவில்லை . அம்மா இல்லாத குறைய தீர்த்தவள் , இன்று நீ ஒரு அநாதை என்று சொல்லாமல் சொல்லியது அவனுக்குள் பெரும் துக்கத்தை வார்த்தது . கண்களில் தன்னையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது .

‘சரி ! நா உன்ன விட்டுப்போறதுதான் உனக்கு சந்தோஷம்னா , உன் சந்தோஷத்துக்காக நா போறேன் ’ என்றவாறு அங்கிருந்து கிளம்பினான் . அவனுக்குள் விவரிக்கமுடியாத துயரம் தாண்டவமாடியது . அவனின் தாய் மட்டும் இருந்திருந்தால் , அவளின் மடியினில் முகம்புதைத்து அழுதுகொண்டே இருந்திருப்பான் . அந்நேரத்தில் கண்ணன் கூட அங்கில்லை .  திக்கற்ற வழியினில் மனம் முழுமையும் துயரத்தில் ஆழ்த்தி , கால் போனபோக்கில் பயணிக்க ஆரம்பித்தான் . என்ன பெண் இவள் ? ஒருநாள் வேண்டும் என்கிறாள் , இன்னொருநாள் வேண்டாம் என்கிறாள் . சுயமாய் முடிவெடுக்கத்தெரியாத முட்டாள் இனத்தைச்சார்ந்தவள் . இவள் படித்துக்கிழித்தால் மட்டும் போதுமா ? வாழ்க்கைச்சார்ந்த ஒரு முக்கியமான முடிவினைக்கூட எடுக்கத்துணிவில்லாத பேடி . என்று ஆள்மனது அவனுக்குள் அவனை சமாதானப்படுத்த முயன்று தோற்றது .

‘உனக்கு அப்பா இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் ’ என்ற குரலே அவனுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது . பேருந்து நிலைத்தை அடைந்ததிலிருந்து எத்தனை சி்கரெட் அடித்திருப்பான் என்று சிகரெட்டுக்கேத்தெரியாது . அவன் மனதில் இருக்கும் துக்கத்தைத்தீர்க்க , நுரையீரலுக்குள் கார்பன் படிமத்தையும் பொலேனியம் 210 ஐயும் கிங்ஸின் வழியாக செலுத்திக்கொண்டிருந்தான் . அவனுக்கு அப்போது தனிமையின் துணை தேவைப்பட்டது .

கல்லூரியில் இருந்த மையலுக்கு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் இருந்தது . அவ்வார்த்தையைக்கூறியபின் அவனை விட அதிகமாய் துன்புற்றவள் அவள்தான் . சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று ஒருவனை அவர் கொண்டுவந்து நிறுத்தியிறா விட்டால் இவ்வளவு தூரம் ஆகியிருக்காது . அன்று அவளின் தந்தைக்கு எதிராய் பெரும்போரேத்தொடுத்திருந்தாள் .

‘எனக்கு மதன் போதும் பா . நீங்கள்லாம் வேண்டாம் . அவனவிட்டு என்னால இருக்கமுடியாது’ என்று தீர்மானமாய் கூறினாள் . அடிக்க வந்த அவளின் தாயின் கையினைத்தடுத்தாள் . அதுவரைப்பொறுமையாய் பார்த்துக்கொண்டிருந்த அவளின் தந்தை அப்படி மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் , இந்நேரம் மதனின் கையால் தாலிகட்டிக்கொண்டு எங்கேனும் சென்றிருப்பாள் .

‘இங்க பாருடி .நீ மட்டும் அந்த பள்ளிப்பையனோட ஓடிப்போன , நாங்கலாம் குடும்பத்தோட தற்கொலைப்பண்ணிப்போம் ’ என்றால் அவளின் தாய் .

‘நீங்க வாழ்ந்து என்ன பண்ண போறிங்க ? பெத்த பொண்ணோட மனசுல என்ன இருக்குனு தெரியாம  இருக்க நீங்கலாம் வாழ்ந்து என்னத்த சாதிக்கப்போறிங்க ?’

இவளைவிட்டாள் இன்றே கிளம்பிவிடுவாள் என்று முடிவெடுத்த அவளின் தந்தை , யாரும் செய்யாத காரியத்தைத்துணிந்து செய்தார் . எழுந்து வேகமாக மையலிடம் வந்தவர் , சிறிதும் யோசிக்காமல் அவள் காலில் விழுந்து அழ ஆரம்பித்தார் . அதுவரை அவள் மனதில் இருந்த திடம் , சுக்குநூறாய் உடைந்துபோனது .

5.15 பேருந்தில் வழக்கம்போல முன்வாயில் சீட்டில் அவள் கன்னங்கள் வீங்கி அமர்ந்திருந்தாள் . படிக்கட்டில் தொங்கியவாறு தன் பயணத்தைத்தொடர்ந்துகொண்டிருந்தான் மதன் . இருவருமே பேசிக்கொள்ளவில்லை . இன்னும் ஒரு நிமிடத்தில் மதனின் ஊர் வந்துவிடும் .

‘மதன்’ என்று அவளின் குரலுக்கு மெல்ல திரும்பினான் . கண்கள் சிவந்து , முகம் வெளிறிப்போயிருந்தான் .

‘எனக்கு யாரும் வேண்டாம் . நீ மட்டும் போதும் . இப்பவே என்ன எங்கயாவது கூட்டிட்டுப்போய்டு . ப்ளீஸ் ’  என்றாள் . அவள் முகம் கெஞ்சலின் உச்சத்தில் இருந்தது . அவன் மட்டும் சரி என்று சொன்னால் அப்போதே கிளம்பிவிடுவாள் . அவன் மௌனமாய் இருந்தான் . அருகில் மாலினியோ இன்று நடப்பதை வீட்டினுள் சொல்லக்காத்திருந்தாள் .

‘மதன்’ என்று மறுபடியும் அவள் அழைக்க திரும்பினான் . ஒருவாறு தீர்மானமாய் கூறினான் .

‘சாரி மையல் . எனக்கு என்னோட அங்குள் தான் முக்கியம் . அவரோட பெருமைய எனக்கு புரியவச்சதுக்கு தேங்ஸ் .’ என்று திரும்பினான் . அவள் கண்களில் நீர் ஓட ஆரம்பித்தது என்று சொல்லவா வேண்டும் . மதனின் ஊர் வந்துவிட்டது . பஸ் மெல்ல நிற்க ஆரம்பித்தது . மையல் அவனின் கைகளைப்பிடித்துக்கொண்டு கண்ணீரோடு இருந்தாள் . அவள் கிட்டத்தட்ட அவன் காலைப்பிடித்துக்கெஞ்சும் மனநிலையில் இருந்தாள் . அவனோ  தன் மனதில் இருக்கும் காதலை ஓரங்கட்டிவிட முயன்று கொண்டிருந்தான் . அவளே வருகிறாள் , பேசாமல் அவளோடு சென்றுவிடலாம் என்று மனம் ஒருபுறம் அலைபாய ஆரம்பித்தாலும் மறுபுறம் அவளின் தீச்சொற்களும் , முடிவெடுக்கத்தெரியாத சிந்தனையையும் நினைத்து பயந்தான் . கடைசியில் ஒருவாறாய் முடிவெடுத்து அவளின் உயிரை அவனின் கையிலிருந்து பிரித்துவிட்டான் .  உயிரற்ற பிணமாய் அவனுடைய ஊரில் இறங்கி முன்னே நடந்தான் . அவளின் சத்தமான அழுகுரல் பேருந்திலிருந்து வந்தது . இவனின் கண்களில் கண்ணீரும் மனதினுள் வலியும் ஒருசேர இருந்தது . பஸ் மெல்ல நகர்ந்தது .அவள் இவனைப்பார்த்து ‘மதன்’ என்று அழுதவாறே கத்திக்கொண்டு சென்றாள் . ஓடிப்போய் அவள் கண்களில் ஓடும் கண்ணீரைத்துடைக்க , இவனின் புலன்கள் துடிதுடித்தன .


                                *****
நான்கு வருடங்களுக்குப்பிறகு ,

‘செமயா படம் போகுதுல்ல ?’ என்றான் பிரபு .

‘ஆமா டூட் ’ என்று பதில் கூறியவனின் குரல் மதனுடையதுதான் . பிரபு , மதனின் ஊர்க்காரன் . கண்ணனுக்கும் தேவிக்கும் திருமணம் முடிந்தபின் , கண்ணன் இல்லறவாழ்க்கையில் பிசியானான் . அந்நேரத்தில் பிரபுதான் மதனுக்கு எல்லாமுமாக இருந்தான் .

‘தியேட்டர்ல வந்து இனிமே படமே பாக்கக்கூடாது டூட் .’ என்றான் பிரபு .

‘ஏன் டூட் ’

‘பின்ன . சன்டிவில போடற விளம்பரத்தவிட அதிகமாக போடுரானுங்க .’ என்று சொன்னான் .

வழக்கம்போல இடைவேளை நேரத்தில் செல்லை நோண்ட ஆரம்பித்திருந்தான் மதன் .

‘ஹே டூட் . இத நா உங்கிட்ட காட்டிட்டனா ?’ என்று ஒரு புகைப்படத்தைக்காட்டினான் மதன் .

‘இல்ல டூட் ’ என்றவாறே அதைப்பார்த்தான் . ஒரு அழகிய குழந்தை செரலாக் மற்றும் ஜூனியர் ஹார்லிக்ஸின் உதவியால் கொழுக் மொழுக் என்றிருந்தது .

‘நல்லா இருக்குடா பாப்பா ’ என்றான் பிரபு . தொடுதிரையைப்பிடித்து இழுக்க , அந்த படம் ஜூம் அவுட் ஆகி ஒரு குடும்பப்போட்டோவைக்காண்பித்தது . ஒரு ஆண்டி , அவளின் கையில் தன்னுடைய குழந்தையை வைத்திருந்தாள் .

‘யாரு டூட் இது ?’ என்றான் பிரபு .

‘என்னோட மையல்விழி டா . பார்த்தியா ? அவ பேபி எவ்ளோ அழகா இருக்கு . அப்படியே அவளோட கண்ணு . இவ பாரேன் . காலேஜ் படிக்கும்போது விலுவிலுனு இருந்தா . இப்போ என்னடானா நல்லா ஊறிட்டா .கல்யாணமானாலே பொண்ணுங்க பொதபொதன்னு ஆயிடுவாங்க போல .’ என்றான் மதன் .

‘டேய் . இவ மொவரைய எதுக்குடா வச்சிருக்க ? அறிவில்ல உனக்கு ?’ என்று கோவப்பட்டவாறே திட்டினான் பிரபு . அவனுக்கு மதனின் காதலைப்பற்றி நன்கு தெரியும் . அவள் ,. அவனைவிட்டு சிங்கப்பூர் மாப்பிள்ளையைத்திருமணம் செய்துகொண்டு சென்றால் என்பதனை அறிந்து அவனை விட அதிகமாய்த்துடித்தவன் . திருமணத்தன்று மதன் மெல்லிய சிரிப்பை உதிர்த்தவாறே ‘அவ என்னோட மையல்டா . கண்டிப்பா என்ன தேடி வருவா’ என்று கூறியதெல்லாம் இன்னும் ஞாபகத்திலிருந்தது .

பிரபுவின் கேள்விக்கு மதன் பதிலேதும் தெரிவிக்காமல் அந்த போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தான் . ஓரளவு கோவத்திலிருந்து வெளிவந்து அவனிடம் கேட்டான் .

‘நீ இப்படில்லாம் பன்றதுக்கு பேர் என்னனு தெரியுமா ?’ என்று கேட்டான் .

‘ம் . தெரியும் டூட் . காதல்’ என்று அவன் கூறும்போது தியேட்டரில் படம் போட்டிருந்தார்கள் . அந்த சத்தத்தில் பிரபுவுக்கு மதன் கூறியது காதில் விழவில்லை .

‘என்ன டூட் ’ என்று சத்தமாய் மீண்டும் கேட்டான் பிரபு . மீண்டும் கூறினான் மதன் , கொஞ்சம் சத்தமாக , மனதில் உணர்ச்சி பொங்க

‘காதல் ……………………………………………………………………………………. காதல் ’


--------- முற்றும் --------



தொடர்புடைய கதைகள்













Comments

  1. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  2. கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பி விடலாமே :)
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. அது படிக்கறவங்களுக்கான பகுதிணா ! நாம நிரப்பக்கூடாது .

      கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி அண்ணா !!

      Delete
  3. Replies
    1. உண்மைக்கு அருகில் நடந்த சம்பவங்களைத்தான் கதையாகப்புனைந்துள்ளேன் அண்ணா !!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை